தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், சென்னை ஜாம்பஜார் கிளை நிர்வாகிகள் சார்பில் வெளியிடப்பட்ட துண்டு பிரசுரத்தில் இந்து மதத்தை இழிவாக குறிப்பிட்டுள்ளதாக கூறி, துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத், விநாயகர் சதுர்த்தி விழாக்குழு உள்ளிட்ட அனைத்து இந்து இயக்கங்கள், சார்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை கைது செய்யவேண்டும் என பிரசுரம் வெளியிட்டனர்.
மேலும் விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில், ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில், காவல்துறையினர் யாகூப் என்பவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கையின்போது, பெண்கள் மட்டும் இருந்த வீட்டுக்குள் நடு இரவில் நுழைந்து அராஜகமாக சோதனை செய்த காவல்துறையினரை கண்டித்தும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று திருவல்லிக்கேணி காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நேற்று மதியம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஆயிரக்கணக்கானோர் திருவல்லிக்கேணி காவல் நிலையம் முன்பு குவிந்தனர். இதையடுத்து, காவல்துறை கூடுதல் ஆணையாளர் ரவிகுமார், உதவி ஆணையாளர்கள் பவானீஸ்வரி, கிரி, ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
திருவல்லிக்கேணி காவல் நிலையம் முன்பு போராட்டம் செய்த அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏறும்படி கூறினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதைத் அடுத்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதில் சிலர் காயமடைந்தனர்.