
குழந்தை ஒன்று அன்னைக்கு அருகில் உறங்கிக் கொண்டிருக்கிறது. அதன் முகத்தில் கொத்துக் கொத்தாக ஈக்கள் மொய்க்கின்றன. மூக்கிலும், முகத்திலும் உள்ள அழுக்குகளால் ஈர்க்கப்பட்ட ஈக்களை தூக்கக் கலக்கத்திலேயே பிஞ்சுக் கைகள் துரத்துகின்றன. ஆனால் ஈக்கள் தூரப் போக மறுக்கின்றன. மீண்டும் மீண்டும் ஈக்கள் அந்தக் குழந்தையின் முகத்தில் படையெடுத்துத் தாக்கிக் கொண்டிருக்கின்றன.
அதிகாலை நேரத்தில் இரயில் இருந்து இறங்கி மண்ணடி சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது இந்த அலங்கோலக் காட்சி கண்ணில் படுகின்றது. காண்போர் இதயங்களைக் கனக்கச் செய்கிறது. கண்களில் நீரை வரவழைக்கின்றது.
அவர்கள் உண்ணுவதும், உறங்குவதும் அங்கு தான். அவர்கள் சமைப்பதும், சட்டி சாமான்கள் கழுவுவதும் அங்கு தான். குளிப்பதும், துவைப்பதும் அந்த இடத்தில் தான். அங்கு நாய்களும், பன்றிகளும் நடமாடிக் கொண்டிருக்கும். கொளுத்துகின்ற வெயிலானாலும், கொட்டுகின்ற மழையானாலும் அந்த வீதிகள் தான் அவர்களின் வீடுகள். தாம்பத்ய வாழ்க்கைக்குக் கூட தகுந்த மறைவிடம் இன்றி தவித்து, தத்தளித்து அந்தத் தரைப் படையினர் தங்கள் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
சென்னைப் பட்டணத்தின் அகன்ற வீதிகளில் இது போன்று ஆயிரமாயிரம் அவலக் காட்சிகள்.
இப்படி ஒரு சாரார் குடிசை கூட இல்லாமல் தரைப் பிராணிகளாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
கூவம் நதிக் கரையில் குடிசை மக்கள்
சிங்காரச் சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்கின்ற போது, குபீரென்று ஒரு வாடை குடலைப் புரட்டுகின்றது. மக்கள் தங்கள் மூக்கைப் பொத்தத் துவங்குகின்றனர். கூவம் நதியைக் கடந்ததும் மூக்கிலிருந்து கையை எடுக்கின்றனர். கொஞ்ச நேரம், பேருந்து கூவம் நதியைத் தாண்டுவதற்குள்ளாக மக்களுக்கு அதன் வாடை குமட்டலைக் கொடுக்கின்றது; குடலைப் புரட்டுகின்றது.
ஆனால் அந்தோ பரிதாபம்! 24 மணி நேரமும் கூவம் நதிக் கரையினில் குடிசை கட்டிக் கொண்டு ஏழைக் குடும்பங்கள் குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். நாற்றத்துடன் நாற்றமாக அவர்களது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கின்றது.
இப்படி ஒரு சாரார் தங்கள் வாழ்க்கையைக் கூவத்தில் கழித்துக் கொண்டிருக்கின்றனர்.
இத்தகைய மக்களுக்கு மாற்று வழி ஏற்படுத்தாத அரசாங்கம், போட்டி போட்டுக் கொண்டு சிலைகளைத் திறப்பதில் மக்கள் வரிப் பணத்தை வாரியிறைத்து, பாழாக்குகின்றது.
கடந்த ஆட்சியில் வீழ்த்தப்பட்ட கண்ணகி சிலையை இந்த அரசு பொறுப்பேற்றதும் முதல் வேலையாக மீண்டும் நிறுவுகின்றது.
கண்ணகி சிலை இல்லாததால் ஐந்தாண்டு காலமாக யாரும் சாப்பிட வழியில்லாமல் திரிந்தது போன்று ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக கண்ணகி சிலை திறக்கப்பட்டது.
இப்போது திரைப்பட நடிகர் சிவாஜிக்கு சிலை!
கோடிக்கணக்கான மக்கள் வரிப்பணம் கற்சிலை நடுவதிலும் கல்லறை கட்டுவதிலும் காலி செய்யப்படுகின்றது. சிலை அமைப்பதற்கு மட்டும் செலவு செய்யப்படுவதில்லை. அதைத் திறந்து வைப்பதற்கு அரசு விழாக்கள் என்ற பெயரில் கோடிக்கணக்கில் செலவு செய்யப்படுகின்றது.
இது போதாதென்று கடற்கரையில் இருக்கும் காந்தி சிலையை, சிவாஜி சிலை மறைக்கின்றது; அதனால் வேறு இடத்தில் சிலையை நிறுவ வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குகள் வேறு!
ஏற்கனவே இருக்கும் தலைவர்களின் சிலைகளில் செருப்பு மாலைகள் போடப்பட்டு அதனால் பல தலைகள் உருண்டதையும், அதனால் சிலைகளை கம்பிகளால் வேலியமைத்து சிறை வைத்ததையும் யாரும் மறந்து விட முடியாது. இந்த நிலையில் இன்னும் சிலைகளுக்காக மக்களின் வரிப் பணம் செலவு செய்யப்பட வேண்டுமா?
கண்ணகி நினைக்கப்பட வேண்டும்; சிவாஜி நினைக்கப்பட வேண்டும் என்று ஆட்சியாளர்கள் கருதினால் அவர்கள் பெயரால் ஓர் உதவித் திட்டத்தைத் துவங்கி, இந்த ஏழை எளிய, பாட்டாளி வர்க்கத்தை வாழ வைத்தால் அந்தத் தலைவர்களை மக்கள் நினைவில் வைப்பார்கள். இதைச் செய்யும் ஆட்சியாளர்களையும் வாழ்த்துவார்கள். தலைமுறை தலைமுறையாய் அந்தத் தலைவர்களும் நினைக்கப்படுவார்கள். இதை விட்டு விட்டு இது போன்ற கற்சிலைகள், கல்லறைகள் அமைப்பதால் யாருக்கு என்ன பயன்?
இன்று உலகத்தில் முஹம்மத் (ஸல்) அவர்களைப் போன்று வேறு எந்த மனிதரும் நினைவில் கொள்ளப் படவில்லை. அவர்களுக்கு எங்கேனும் சிலை இருக்கின்றதா? நினைவாலயம் இருக்கின்றதா? என்றால் நிச்சயமாக இல்லை.
சில்லறை உண்டு சிலைகள் இல்லை
இன்று உலகில் உள்ள நாடுகளில் சிலைகளே இல்லாத நாடு சவூதி அரேபியா தான். அந்த சவூதி அரேபியா நம் நாட்டைப் போன்று வறுமையில் இல்லை. சில்லறையும், செழிப்பும் உள்ள நாடு!
அந்த நாடு நினைத்தால் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு தங்கத்தினால் சிலை வைக்கலாம்; வைரத்தால் கிரீடம் சூட்டலாம்.
ஆனால் அந்நாடு அந்தக் காரியத்தில் இறங்கவில்லை. அதற்குக் காரணம் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கடுமையான காட்டமான, சாபம் நிறைந்த எச்சரிக்கை தான்.
நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன் நோயுற்றிருந்த போது, ''யூதர்களையும், கிறித்த வர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்டனர்'' என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையென்றால் நபி (ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப் பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகிறேன். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 1244
இது நபி (ஸல்) அவர்கள் மரணமடைவதற்கு நான்கைந்து நாட்கள் இருக்கும் போது, மரணப் படுக்கையில் விடுத்த எச்சரிக்கையாகும்.
''தரை மட்டத்திற்கு மேலுள்ள எந்த ஒரு கப்ரையும் தரை மட்டமாக்காமல் விட்டு விடாதே'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்: முஸ்லிம் 1609
இத்தகைய எச்சரிக்கைகள் காரணமாக சவூதியில் சிலைகளோ, கல்லறைகளோ இல்லை. இந்தக் கற்சிலைகளுக்கும், கல்லறைகளுக்கும் காசு பணம் செலவு செய்யப்படவும் இல்லை.
காரணம் மக்களின் வரிப் பணத்தை இது போன்று பாழாக்க இஸ்லாம் அனுமதிக்கவில்லை. அந்தப் பொருளாதாரத்தை உரிய முறையில் உரியவர்களுக்கு வழங்கச் சொல்கிறது.
அதனால் தான் அந்த நாட்டில் இது போன்று சாலையில் குடும்பம் நடத்தும் தரைப் படையினர் இல்லை. அந்த நிலை இங்கும் வர வேண்டுமென்றால் இஸ்லாம் தான் அதற்குரிய ஒரே தீர்வாக இருக்க முடியும்.